சென்னை: தனியார் பேருந்தில் தரமற்ற 2,500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
சென்னை: தவறான முறையில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தரமற்ற 2,500கிலோ மாட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமீபகாலமாக, வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தரமற்ற, புழுக்கள் நெளிந்த மாட்டிறைச்சிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதனால், ரயில்களில் தரமற்ற மாட்டிறைச்சியை கொண்டு வருவதில் சிக்கல்கள் தொடர்வதால், குற்றவாளிகள் சாலைகளின் வழியாக தங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இத்தகவலை அறிந்த அதிகாரிகள் வாகனச் சோதனியில் ஈடுபட்டனர். அதன்படி, இன்று சாலை வழியாக கொண்டு வரப்பட்ட தரமற்ற 2500 கிலோ மாட்டிறைச்சி சோதனையில் சிக்கியது. அதனை உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
மேலும், இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, 'சென்னைக்கு தனியார் பேருந்து மூலம் தரமற்ற மாட்டிறைச்சி கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை கண்டறிய பலமுறை முயற்சி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வேப்பேரி பகுதியில் வந்துக் கொண்டிருந்த இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டையில் கட்டப்பட்ட சுமார் 2,500 கிலோ மாட்டிறைச்சி இருந்தது. இதனை பரிசோதனை செய்ததில் அவை கெட்டுப்போனவை என்று தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இறைச்சி கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் அழிக்கப்பட்டது. இறைச்சி கடத்தி வந்த இரண்டு பஸ்களும் கர்நாடகம் மாநில பதிவு கொண்டவை. அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரிக்கப்பட்டனர். அடுத்த முறையும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த இறைச்சி வாணியம்பாடியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த இறைச்சி சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில், ஆட்டிறைச்சியுடன் கலப்படம் செய்து விற்கப்படுவதாக தெரிகிறது' என அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications