ஜெ.விடம் ஆதரவு கோரிய கையோடு வேட்பு மனுத் தாக்கல் செய்தார் இ.கம்யூ. வேட்பாளர் டி.ராஜா!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 6 இடங்களுக்கான தேர்தலில் அதிமுக 5 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. 151 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுக உறுதியாக 4 எம்.பிக்களைப் பெற்றுவிடும். 5வது எம்.பியை கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களைக் கொண்டும் கைப்பற்றிவிடும். இவர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறாமலேயே வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
இந்நிலையில் 6வது எம்.பி. இடத்துக்கு திமுக வேட்பாளராக கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுடன் அவர் போட்டியிடுகிறார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் தேமுதிக ஆதரவு தருகிறது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியோ இதை முற்றாக நிராகரித்துவிட்டது. தேமுதிகவோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை வாங்கிச் சென்றது. இந்த சூழ்நிலையில் 6வது எம்.பி இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி.ராஜா நேற்று அறிவிக்கப்பட்டார். 6 வது எம்.பி இடத்துக்கு இருவர் போட்டியிடுவதால் நிச்சயம் தேர்தல் நடைபெறும் என்ற நிலைமை உருவானது.
இதனிடையே இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருருமான ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் டி.ராஜா சந்தித்து தமக்கு ஆதரவளிக்கக் கோரினார். பின்னர் தேர்தல் அதிகாரியிடம் தமது வேட்புமனுவை டி. ராஜா தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications