மோடி புராணம் பாடிவிட்டு மோடிமஸ்தான் வித்தை காட்டும் அத்வானி, நிதிஷ் கோஷ்டி!
டெல்லி: இந்திய அரசியலில் ஜூன் 2வது வாரம் மிகப் பெரும் அதிர்வலைகள் உருவாக்கப்பட்டன. இந்த அதிர்வலையில் நாட்டின் இரு பெரும் மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமத்தை நோக்கி பயணப்பட்டன என்பது நிதர்சனமானது. ஆம் அந்த இருபெரும் தலைவர்கள் அத்வானியும், நிதிஷ்குமாரும்தான்...
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக, லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக்கியது. இதற்கு அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பதவிகளையே ராஜினமா செய்கிறேன் என்று நாடகமாடினார். இதேபோல் தொடக்க காலங்களில் நரேந்திர மோடி விவகாரம், பாஜகவின் உட்கட்சி விவகாரம் எனக் கூறிக் கொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான நிதிஷ்குமார், இப்போது கூட்டணியை விட்டே வெளியேறுகிறேன் என்று கூறுகிறார்.
சொன்னது யார்? யார்? மிஸ்டர் அத்வானி!
நரேந்திர மோடியை நிதிஷ்குமார் வெறுப்பதற்கு சொல்லும் காரணம் குஜராத் கலவரம்.. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற 2002ஆம் ஆண்டு நாட்டின் ரயில்வே அமைச்சராக இருந்தவர் இதே நிதிஷ்குமார்தான்! நாட்டின் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக இருந்தவரும் இதே அத்வானிதான்! 2002ஆம் ஆண்டு இவர்கள் இருவருமே எந்த ஒரு கருத்தையுமே தெரிவிக்கவில்லை! ஆனால் இப்போது திருவாய் திறக்கிறார்கள்.. மத்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்த இருவருமே அன்றைய குஜராத் முதல்வரான மோடிக்கு எதிராக எதுவுமே பேசாதது ஏனாம்? இப்போது பேசுவது ஏனாம்?
அதுமட்டுமின்றி.. அத்வானி தமது சுயசரிதை என எழுதிய நூலில் (பக் 758-759)ல் குஜராத் கலவரத்தின் போது மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியை தாம் தடுத்ததாகவும் அப்படி மோடியை நீக்குவது மட்டுமே பிரச்சனைக்கு தீர்வாகாது. உண்மையான தீர்வைக் கண்டறிய வேண்டும் என்று எழுதியவரும் சாட்சாத் எல்.கே.அத்வானியேதான்! அத்தோடு மட்டுமா அத்வானி எழுதியிருக்கிறார்... 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் ஆட்சிக் காலத்தில் ஒரு கலவரமும் ஏற்பட்டது இல்லை.. இந்த காலகட்டத்தில் அம்மாநிலம் மோடியின் தலைமையில் சமூக பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது என புகழ்மாலையெல்லாம் சூட்டிய எல்.கே.அத்வானிதான் இன்று அதே மோடிக்கு தேசிய அளவில் ஒரு பொறுப்பு கிடைக்கும் போது புளுங்கிப் போய் புழுவாகத் துடிக்கிறார்!
மேலும் 2002ஆம் ஆண்டு கோவாவில் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப் போகும் வழியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தம்மிடம், மோடி ராஜினாமா செய்வதாகவாவது அறிவிக்க வேண்டும் என்றார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். ஆனால் தேசிய செயற்குழுவில் பேசிய மோடியோ, ஒரு அரசுக்குப் பொறுப்பானவர் என்ற முறையில் தாம் பதவி விலக தயார் என்று அறிவித்தார். இதை பாஜக நிர்வாகிகள் ஏற்கவில்லை. மறைந்த பிரமோத் மகாஜனோ, மோடி பதவி விலகுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றார். இது தமக்கு மகிழ்ச்சியை அளித்தது என்றெல்லாம் மோடி புராணம் பாடிவிட்டு இன்று பதவிக்கு மயங்கும் மோடிமஸ்தான் போல பம்மாத்து காட்டுகிறார் எல்.கே.அத்வானி
இவரைப்போல்தான் நிதிஷ்குமாரும்!
2005ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார், 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டது. நரேந்திர மோடியை இலக்கு வைத்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டது காங்கிரஸ். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் எடுபடாது என்றவர் இன்று மோடியை கலகக்காரராக முன்னிறுத்தும் நிதிஷ்குமார்தான்! மோடியின் தலைமைப் பண்பை எப்போதுமே புகழ்வதுதான் நிதிஷின் வேலையாகவே இருந்தது! மோடியின் தலைமை இந்தியாவுக்குத் தேவை என்று பகிரங்கமாக பேசிய நிதிஷ்குமார்தான் இன்று எந்த சிறப்பு நிதிக்காக மோடியை எதிர்க்கிறாரோ தெரியவில்லை? மோடியை குஜராத் மக்கள் நிராகரிக்கவே இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலும் வெளிப்படுத்துகிறது.. குஜராத் மக்கள் தெளிவாக இருக்கும் போது நிதிஷ்குமார்தான் இப்படி அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார்!
அத்வானிக்கும் நிதிஷ்குமாருக்கும் ஒரு பாதுகாப்பற்றதன்மையில் இருக்கிறோம் என்ற நோய் பீடித்திருக்கிறது. அத்வானிக்கு இனி நம்ம கதை முடிந்து போனது என்ற அச்சம்... நிதிஷ்குமாருக்கு மோடி நம்மை தூக்கி சாப்பிட்டுவிட்டாரே என்ற பொறாமை. இவர்கள் என்ன செய்தாலும் மோடியின் தேசிய அரசியல் பயணம் நிறுத்தப்பட முடியாது என்பதே நிதர்சனம்!












Click it and Unblock the Notifications