சோலார் பேனல் மோசடி: தொழில் அதிபர் பிஜூவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- நடிகை ஷாலு மேனன்
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடியில் தொடர்புடைய தொழில் அதிபருக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மலையாள நடிகை ஷாலு மேனன் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடியில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் மலையாள நடிகையும், நாட்டிய கலைஞருமான ஷாலு மேனனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், பிஜூ ஷாலு மேனனுக்கு சொகுசு காரின் சாவியை கொடுப்பது போன்ற படங்கள் வெளியாகின. இதனால் சோலார் பேனல் மோசடியில் ஷாலுவுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ஷாலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரின் நிறுவனம் மூலம் என் வீட்டில் சோலார் பேனல் வைப்பதாகக் கூறியதால் அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வந்தார். அவர் எனக்கு கார் எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. கொச்சியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ரூ.5 லட்சம் முன் பணம் கட்டி நான் தான் கார் வாங்க பதிவு செய்தேன். மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டுவதாகக் கூறினேன்.
நான் கார் வாங்க சென்றபோது பிஜூ ராதாகிருஷ்ணனும் என்னுடம் வந்தார். அவர் என்னிடம் கார் சாவியை கொடுப்பதை புகைப்படம் எடுத்த சிலர் தற்போது அதை திரித்து வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் எடுத்த விஷயமே எனக்கு தெரியாது. எனக்கும் பிஜூ ராதாகிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.
பேட்டியின்போது அவரது தாயார் உடனிருந்தார். கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் ஷாலு கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications