சிவகங்கை டீக்கடைகளில் என்ன பேசுகிறார்கள் தெரியுமா...?
சென்னை: மத்திய இணை அமைச்சராகியுள்ள சுதர்சன நாச்சியப்பனின் நியமனம், ப.சிதம்பரம் தரப்பை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம். ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையிலும் கூட நாச்சியப்பன் எழுச்சி குறித்த பேச்சாகவே உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள். அதில் பலமான வாத்தியக் கோஷ்டி ஜி.கே.வாசன் அன் கோதான்.
அடுத்து பெரிய கோஷ்டி என்றால் அது ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இணைந்த இரட்டைக் குழல் கோஷ்டிதான். இவர்களைத் தாண்டித்தான் மற்ற கோஷ்டிகள் கச்சேரி நடத்த முடியும்.
ஆனால் இதில் எதுவுமே சேராமல், தான் பாட்டுக்கு தனிக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பவர் சுதர்சன நாச்சியப்பன் மட்டுமே.

டெல்லியில் ஒலித்தால் தமிழகத்தில் கேட்கும்
தமிழகத்தை நம்பியே இல்லை நாச்சி. மாறாக, டெல்லிதான் அவருடைய பலம். அதிலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மட்டுமே இவர் நம்பியுள்ளார். அவர்களுக்கு விசுவாசமாக தீவிரம் காட்டுபவரும் கூட.

ஜார்ஜ் வழியாக சோனியாவிடம் நெருக்கம்
சோனியா காந்தியிடம் நீண்ட காலமாகஉதவியாளராக இருப்பவர் ஜார்ஜ். இந்த கேரளத்து ஜார்ஜ் உறவு வழியில்தான் தனது மகனைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் நாச்சி. இப்போது தெரிகிறதா.. நாச்சிக்கு ஏன் சோனியாவிடம் செல்வாக்கு இருக்கிறது என்று.

சிதம்பரத்தின் நிரந்த தலைவலி
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நிரந்தரத் தலைவலியாக தனது தலைவி சோனியா வழியி்ல நடை போட்டுக் கொண்டிருக்கிறார் நாச்சி. சிவகங்கையில் ப.சிதம்பரத்திற்கு உள்ள ஒரே திருகுவலி நாச்சி மட்டுமே.

ஒருமுறை எம்.பி.
ப.சிதம்பரம் இடையில் காங்கிரஸை விட்டு தனிக் கட்சி கண்டபோது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நாச்சியப்பன். ஆனால் அடுத்த தேர்தலிலேயே மீண்டும் காங்கிரஸுக்கு வந்து விட்டார் ப.சி. இதனால் நாச்சிக்கு மீண்டும் சிவகங்கை கிடைக்கவி்ல்லை

ராஜ்யசபாவுக்கு போனார்
சிவகங்கை கிடைக்காவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து சோனியா சொன்னதைக் கேட்டு வந்ததால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் சோனியா. ராகுலின் அன்புக்கும் பாத்திரமானதால் மீண்டும் ராஜ்யசபா எம்.பியானார்.

தீவிர சிதம்பரம் எதிர்ப்பு
நாச்சியப்பன் எங்கிருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அவரது ஒரே கொள்கை ப.சிதம்பரம் எதிர்ப்புதான். காரணம் அதே வேலையை ப.சிதம்பரம் தரப்பு, நாச்சிக்கு எதிராக படு தீவிரமாக செய்து வந்ததால்.

நாச்சிக்கு ஏன் திடீர் பிரமோஷன்
இந்த நிலையில்தான் நாச்சியப்பனை மத்திய அமைச்சராக்கியுள்ளது காங்கிரஸ். இதற்குப் பின்னால் ராகுல் காந்தி இருப்பதாக தெரிகிறது. ராகுலுக்கு ப.சிதம்பரத்தை முழுமையாக பிடிக்காது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவேதான் நாச்சியைக் கொண்டு வந்ததில் ஏதாவது உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எப்படியோ, நாச்சியப்பன் அமைச்சரானதில் நாட்டுக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, ப.சிதம்பரத்திற்கு கண்டிப்பாக கஷ்டம்தான் என்று இப்போதே சிவகங்கை பகுதி டீக்கடைகள் தோறும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications