அட, களவாணிப் பயலுகளா.. மணப்பெண்ணோட கல் வளையலைக் கூட விடலையாடா நீங்க!
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கல்யாண மண்டபத்துக்குள் புகுந்த சில களவாணிப் பயல்கள், அங்கு மணப்பெண் அறையில் இருந்த மணப்பெண்ணின் நகைகளை ஒட்டுமொத்தமாக திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஹேமா என்ற பெண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த உதயக்குமாருக்கும் திருமணம் நிச்சயமானது. இன்று திருமணம் அறந்தாங்கியில் நடப்பதாக இருந்தது.
நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பெரும் திரளான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்து, விருந்து முடிந்து உறவினர்கள் கிளம்பிச் சென்றனர். மணப்பெண் வீட்டார் மண்டபத்திலேயே தங்கினர்.
இந்த நிலையில், மணப்பெண் ஹேமாவின் அண்ணி நளினி மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தனது மகனுடன் தங்கியிருந்தார். அந்த அறையில் திருமணத்திற்கான நகைககள் 3 சூட்கேசுகளில் வைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவில் திடீரென்று எழுந்த நளினியின் மகன் தன்னை ஏ.சி. அறையில் தூங்க வைக்குமாறு கேட்டு அழுதுள்ளான். உடனே தனது மகனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஏ.சி. அறைக்கு சென்று தனது மகனை படுக்கவைத்துவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கு திரும்பினார்.
அப்போது அந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேசுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 45 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு நளினி பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த அறையில் இருந்த 15 ஆயிரம் ரொக்க பணம், 3 செல்போன்களும் கொள்ளை போயிருந்தது.
5 பவுன் ஆரம், 5.5 பவுன் ஆரம், 7.5 பவுன் நெக்லஸ், 4 பவுன் கல் நெக்லஸ், 2 பவுன் செயின், 5 பவுன் கல் வளையல்கள் 2 செட், 4 பவுன் டாலர் செயின், 3.5 பவுன் கல் வைத்த ஜிமிக்கி 2 செட் உள்ளிட்ட 45 பவுன் நகைகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications