அடித்து நொறுக்குது மழை... வருமானத்தை அள்ளிக் குவிக்குது தமிழ்நாடு சுற்றுலாக் கழகம்!
சென்னை: வட கிழக்குப் பருவ மழை ஏமாற்றினால் என்ன, நான் இருக்கிறேன் உங்களை மகிழ்விக்க என்ற ரீதியாக தென் மேற்குப் பருவ மழை ஒட்டு மொத்த இந்தியாவையும் ஈரப்பதமாக்கி மக்களை குளிர்வித்து வருகிறது. இந்த மழையால் ஒரு பக்கம் பேரழிவு மக்களை பதம் பார்த்தாலும், மறுபக்கம் தென்னிந்தியாவில் சுற்றுலாத்துறையினருக்கு பெரும் லாபம் கிடைத்து வருகிறதாம்.
தென் மேற்குப் பருவ மழையால் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பெரும் சந்தோஷத்தில் மிதந்து வருகிறதாம். காரணம், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பெருகியிருப்பதால்.
தமிழகத்தின் முக்கிய அருவிகளில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டி வருவதால் அங்கு மக்கள் குவிகின்றனர். மேலும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கும் நல்ல வருமானம் குவிந்து வருகிறதாம்.

படகில் குவியும் பணம்
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் உள்ள படகுக் குழாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நல்ல வருவாய் கிடைத்து வருகிறதாம்.

நீர்வீழ்ச்சிகளில் பண மழை
குறிப்பாக நீர்வீ்ழ்ச்சிகள் அருகே அமைக்கப்பட்டிருக்கும் படகுக் குழாம்களில்தான் பெரும் கூட்டம். நல்ல வருவாயும் கூட.

குற்றாலத்தில் அமோக வருவாய்
குற்றாலம்தான் இதில் முன்னணியில் உள்ளது. காரணம், இது சீசன் காலம். எனவே குற்றாலத்தில் உள்ள அத்தனை அருவிகளிலும் நல்ல கூட்டம் காணப்படுகிறது. அங்குள்ள படகுக் குழாமிலும் கூட மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம்.

குமரியிலும் குவியும் மக்கள்
அதேபோல குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் இப்போது சீசன் என்பதால் அங்கும் மக்கள் தலைகள்தான் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால், சுற்றுலாத் துறையின் பர்ஸ் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறதாம்.

ஹோகனேக்கலுக்கும் போகலாமே
இதேபோல காவிரிக் கரையோரம் உள்ள ஹோகனேக்கல் அருவிக்கும் மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

12 மாவட்டங்களில் 47 இடங்களுக்குக் குறி
மேற்குத் தொடர்ச்சி மலையோரம் உள்ள சில பகுதிகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மேம்பாட்டுக்காக அடையாளம் கண்டுள்ளதாம். அதாவது 12 மாவட்டங்களில் உள்ள 47 இடங்கள் இவை. இங்கு பெரிய அளவில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம்.

வாராவாரம் ஆரவாரம்தான்....
இந்த 47 இடங்களிலும் வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் குவிகின்றனர். இதை மாற்றி தினசரி மக்கள் அதிக அளவில் வரும் வகையில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறதாம்.

11 படகு குழாம்கள் மூலம் ரூ. 4.80 கோடி வசூல்
தமிழக சுற்றுலாத்துறைக்குச் சொந்தமாக 11 படகுக் குழாம்கள் உள்ளனவாம். இதிலிருந்து இந்த ஆண்டு ரூ. 4.80 கோடி வருவாய் வசூலாகியுள்ளதாம். இது கடந்த ஆண்டை விட ரூ. 50 லட்சம் அதிகமாம்.

குற்றாலத்தில் எப்படியும் ரூ.5.5 லட்சம் அள்ளிரனும்...
அதேபோல குற்றாலத்தில் இந்த சீசனில் ரூ. 5.5 லட்சம் அளவுக்கு வசூலித்து விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications