இந்துக்களை அவமதிக்கும் பேச்சு: ஹைகோர்ட்டில் கருணாநிதி பதில் மனு தாக்கல்

கடந்த 2002ம் ஆண்டில் தமிழக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறுபான்மை அமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என்று கூறினார். கருணாநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுதமன் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் 2002ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து கவுதமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதி மீது நான் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி. சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார். நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சசிதரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications