தம்பி.. அடிடா தந்தி...!
சென்னை: போய் வா தந்தியே என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அதாவது பலரது இறப்புச் செய்திகளையும், அவசரச் செய்திகளையும் கொடுத்து உதவி வந்த தந்திக்கு அந்திமக் காலம் வந்து விட்டது.
160 வருடமாக தத்தித் தத்தித் தாவி வந்த தந்தி ஜூலை 15ம் தேதியுடன் தனது மூச்சை நிறுத்துகிறது.
மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றது இந்த தந்தி.. எத்தனையோ விஷயங்களை மனித குலம் கண்டிருந்தாலும் இந்தத் தந்திக்கும் அதில் நீங்காத இடம் உண்டு.
தந்தியும், மக்களும் பிரிக்க முடியாது என்பது போல இந்த அரசியல்வாதிகளுக்கும் தந்தி ரொம்ப வேண்டிய தோஸ்த்தாக இருந்தது.

திமுகவினரின் உடன் பிறப்பு
திமுகவுக்கும் தந்திக்கும் இடையிலான பாசப் பிணைப்பு.. சொல்லில் அடங்காதது.. சொன்னாலும் புரியாதது... வாய் புளித்ததோ, மாங்காய் வெடித்ததோ.. பாத்தீங்களா.. அரசியல் பத்தி எழுதினாலே வாய் எப்படி போகுது பாருங்க நமக்கு... தந்தியானது திமுகவினரின் உடன் பிறப்பு போல என்றுதான் சொல்ல வந்தோம்.

தம்பி.. அடிடா தந்தி...
திமுகவினரிடம் அடி வாங்கி வாங்கி இளைத்துப் போய் விட்டது தந்தி என்று கூறலாம். காரணம், திமுகவினர்தான் அடிக்கடி தந்தி அடிப்பார்கள். தலைவர் திடீரென அறிவிப்பார்.. தம்பி டெல்லிக்கு அடி தந்தி என்று.. உடனே டெலிகிராப் ஆபீஸ் பக்கம் கரைவேட்டி கூட்டம் கரைபுரண்டோடும்.. அரசுக்கும் நாலு காசு கிடைக்கும்.

பாவம் பிரதமர்...
திமுகவினர் பெரும்பாலும் பிரதமருக்குத்தான் அடிக்கடி தந்தி அடித்து டென்ஷன் கொடுத்தவர்கள் என்று சொல்லலாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தந்தி அடித்து விடுவார்கள். பிரதமர் அலுவலகத்தில் தபால்களைப் பெறும் அலுவலகம் போல தந்திகளைப் பெறவும் தனி பிராஞ்ச் போடும் அளவுக்கு தந்திகள் பறந்த காலம் .. அது ஒரு கிராப் காலம்

இனி எப்படி அடிப்பீங்க....
அப்படியாப்பட்ட தந்தியை இப்போது நிறுத்தப் போகிறார்கள் என்ற செய்தி, யாருக்கு எப்படி இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் திமுகவினர் போன்ற அரசியல்வாதிகளுக்கு பெரிய கஷ்டமான செய்திதான்...

எஸ்.எம்.எஸ்.அனுப்புவோம்ல...
ஒருவேளை தந்தியை விட படு வேகமாகப் போகும் எஸ்.எம்.எஸ்களைக் கையில் எடுப்பார்கள் என்று நம்பலாம்.. பட்டென்று செல்லை எடுத்து... start immediately. polls come. seat give. otherwise bye bye. LOL என்று தட்டி விட்டு தட்டாமாலை சுற்றுவார்கள் என்று நம்பலாம்.

கடைசி ஸ்லைடரில் கொஞ்சம் சீரியஸ் மெசேஜ்...
உண்மையில் தந்தியை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இருக்காதுதான். காரணம் அதன் புராதாணம், பாரம்பரியம். ஆனால் தந்தி கொடுக்க ஆளே இல்லை, இதனால் வருவாயும் இல்லை.. அதனால்தான் அதை நிறுத்துகிறார்கள்..
கஷ்டமாத்தான் இருக்கு.. தந்தியை நிறுத்துவதை நினைத்து அல்ல. கட்சித் தலைவர்கள் படப் போகும் கஷ்டத்தை நினைத்து.












Click it and Unblock the Notifications