டிராபிக் ராமசாமிக்கு 24 மணி நேர பாதுகாப்பு- கோர்ட் உத்தரவு

இதுதொடர்பான உத்தரவை டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முன்னதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் வருகிறது. எனவே, முழு நேர போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை நீதிபதி சசிதரன் விசாரித்தார். பின்னர், மனுதாரர் டிராபிக் ராமசாமி இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். பொதுநலன் உள்ள அந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் பெற்றுள்ளார்.
மனுதாரர் 80 வயதான சமூக சேவகர். அதிகாரிகளுக்கு எதிராகவும், வணிகர்களுக்கு எதிராகவும் அவர் வழக்குகளைத் தொடர்ந்துள்ளதால் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வரும் என்பது இயற்கைதான். இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. எனவே, டிராபிக் ராமசாமிக்கு முழுநேர பாதுகாப்பு தரும் வகையில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரியை போலீஸ் டிஜிபி நியமிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும். வழக்கு விசாரணை ஜூலை 22ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
கட்டாய ஹெல்மட் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான வழக்குகளைத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றவர் டிராபிக் ராமசாமி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications