என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்பதா? பிரதமருக்கு ஜெயலலிதா கண்டனம்

பிரமருக்கு ஜெயலலிதா எழுதிய கடித விபரம் வருமாறு:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள தனது 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது தொடர்பாக நான் மீண்டும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டாம் என்று கடந்த 8-ந்தேதி உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன். என்றாலும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முடிவு எடுத்து இருப்பது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் தருகிறது.
தமிழ்நாட்டுக்கு மக்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்வதையே இது மீண்டும் உதாரணமாக காட்டுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு வேறு 2 மாற்று வழியில் அமைதியான தீர்வு காணலாம் என்று நான் கூறி இருந்தேன்.
என்.எல்.சி. பங்குகளை விற்றால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் நான் உங்களுக்கு 23.5.2013 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நான் தெரிவித்திருந்த 2 மாற்று வழிகள் பற்றி கொஞ்சம்கூட ஆராயாமல் மத்திய அரசு புறக்கணித்து தள்ளுபடி செய்து விட்டது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இது தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்தில், என்.எல்.சி.யில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியம் தருகிறது. என்.எல்.சி.யில் உள்ள தனது 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.466 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது.
தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த முடிவு உள்ளது. பங்கு சந்தைகளில் சமீபகாலமாக சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், என்.எல்.சி. பங்குகளை விற்க உங்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது என்பது எனக்கு வியப்பாக உள்ளது.
லாபம் தரும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. பங்குகளின் உண்மையான மதிப்பு மத்திய அரசுக்கு தெரியாதா, தங்கத்தை விற்க தொடங்கி இருப்பதால் மத்திய அரசின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. எந்த ஆலோசனையும் நடத்தாமலே மத்திய அரசு அவசரமாக இந்த முடிவை எடுத்துள்ளது.
பங்குகளை விற்பது தொடர்பாக தொழிற்சங்கத்துடனும், தொழிலாளர் அமைப்புகளுடன் கலந்து பேசிவிட்டதாக நீங்கள் எனக்கு எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் மத்திய அரசின் விரும்பத்தகாத இந்த நடவடிக்கையால் தொழிலாளர்கள் போராடப் போவதாக கூறியுள்ளனர். தவிர்க்கப்பட வேண்டிய இந்த போராட்டத்தை தமிழகம்தான் எதிர்கொள்ள வேண்டும். இது மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்னையை மேலும் அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.
செபியின் விதிகள், வழிகாட்டிகளை மட்டுமே கொண்டு மத்திய அரசு வெறுமனே என்.எல்.சி. பங்குகளை விற்கும் முடிவை எடுத்து இருக்கக்கூடாது. எனவே என்.எல்.சி.யில் உள்ள 5 சதவீத பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நான் ஏற்கனவே முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரத்தில் 2 மாற்று வழிகளை கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எனவே என்.எல்.சி. விவகாரத்தில் மத்திய அரசு உடனே தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம்தான் தமிழக மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும்" என்று கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications