மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி உதவி: ஜெயலலிதா

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்தவாரம் பெய்த கன மழையால் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பல புனித தலங்கள் பாதிக்கப்பட்டன.
ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர். எனவே உத்தரகண்ட் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்திருப்பதுடன் ஏராளமான சொத்துக்கள் நாசமாகி உள்ளன. அந்த ஊர் மக்கள் மட்டு மல்லாமல் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்தரி, ஹேம்குண்டு சாகிப் ஆகிய புனித தலங்களுக்கு சென்றவர்களும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து சென்று அங்கு சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 19-ந் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. உத்தரகாண்டில் சிக்கிய தமிழர்களை பற்றி உறவினர்கள் தரும் தகவல்கள் போன் மூலம் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் தமிழக யாத்ரீகர்கள் அரசு செலவில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்த நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் உயிரிழந்த மக்களுக்கும் அவர்களது குடும்பத் தினருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
உத்தரகாண்ட் மாநிலம் உடனடியாக தீவிர மீட்பு பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும், மறு கட்டுமான பணிகளை வருங்காலங்களில் செய்ய வேண்டி உள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும் தமிழ்நாடு மக்கள் சார்பிலும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இதன் அடிப்படையில் உடனடி உதவியாக ரூ.5 கோடியை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உத்தரகாண்ட் மாநில அரசுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். உத்தரகாண்ட் மாநிலம் மேலும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு எப்போதும் தயராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications