காரைக்காலில் விழாக்கோலம்... மாங்கனிகளை வீசி பக்தர்கள் கொண்டாட்டம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று காரைக்காலில் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் மாங்கனிகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் கோவில் காரைக்காலில் உள்ளது. சிவபெருமான் மனிதராக உருவெடுத்து காரைக்கால் அம்மையார் வீட்டில் அமுது உண்டதாக வரலாறு கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காரைக்கால் அம்மையார்-பரமதத்த செட்டியார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு சிவபெருமானான பிச்சாண்டவமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு காரைக்கால் அம்மையார்-பரமதத்த செட்டியார் முத்து பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி திருவிழா இன்று காலை நடந்தது. சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். சுவாமி வீதி உலா வந்தபோது அந்த தெருக்களில் பக்தர்கள் வீட்டு மாடிகளிலிருந்து மாங்கனிகளை வீசி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அந்த மாங்கனிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர். இன்று மாலை சுவாமி அம்மையார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications