இது தற்காலிகமான கூட்டணிதான்.. சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
தேனி: ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் திமுகவுக்கு ஆதரவு தருவது என்பது தற்காலிகமான ஒன்றுதான். இதைப் புதிய கூட்டணியாக பார்க்கக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் 2 சட்டசபை உறுப்பினர்களும் திமுகவுக்கு ஆதரவு தருவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியாகும். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தேனியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில், கல்வி, வேலைவாய்ப்பில், அருந்ததியினருக்கு, 3 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. உள்ஒதுக்கீடு போக, எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும், அருந்ததியினர் ஒதுக்கீடு பெறலாம் என, அரசாணை உள்ளது.
இது மற்ற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது; இதில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
ராஜ்யசபா தேர்தலில், அசாதாரண சூழ்நிலையில், திமுக வை ஆதரித்துள்ளோம். இது லோக்சபா தேர்தலுக்கான புது கூட்டணி அல்ல. அதிமுகவுடன் கூட்டணி சட்டசபை தேர்தலுடன் முடிந்துவிட்டது. தற்போது, நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications