பீகார்: நிதிஷ் அரசுக்கு மீண்டும் சிக்கல்- 3 எம்எல்ஏக்கள் பா.ஜ.கவுக்கு தாவினர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் கூட்டத்தில் லோக்சபா பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது.
எனவே பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவினை வாபஸ் பெற்றது பாரதீய ஜனதா கட்சி. இதனைத் தொடர்ந்து பீகார் சட்டப் பேரவையில் கடந்த 19ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 243 உறுப்பினர்களில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 126 ஓட்டுக்கள் கிடைத்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சைகள் தலா 4 பேர், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவர் அரசுக்கு ஆதரவளித்தனர். இது மெஜாரிட்டியை விட 4 எண்ணிக்கை அதிகம் என்பதால் நிதிஷ்குமார் அரசு தப்பியது.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத பாஜக எங்களுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் மட்டுமே நிதிஷ்குமார் ஆட்சியை பிடிக்க முடிந்தது எனவே ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பாட்னாவில் நேற்று நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராம் சரித்திர பிரசாத் சிங், பால் முகுந்த் சர்மா, சுஜித் மஜி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். மேலும் சில எம்.எல்.ஏ.க் களும் பா.ஜ.கவிற்கு வருவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால், நிதிஷ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications