வண்டலூர் பூங்காவில் மக்கள் வாக்குவாதம்! தவெக அமைச்சர் திடீர் உத்தரவு! ஒரே கூட்டம்!
சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் முன்பதிவு செய்தோர் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்பட்டதை கண்டித்து வாக்குவாதம் நடந்த நிலையில் அனைவரையும் அனுமதிக்க அமைச்சர் ரஞ்சித் குமார் உத்தரவிட்டதை அடுத்து முன்பதிவு செய்யாதவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
முதல்வர் விஜய்யின் 52ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வண்டலூர் பூங்காவில் இன்றும் நாளையும் இலவசமாக அனுமதிக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்திருந்தார்.

அதிலும் முன்பதிவு செய்யும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் காலையிலேயே குழந்தைகளுடன் மக்கள் வண்டலூர் பூங்காவுக்கு வந்தனர்.
அப்போது முன்பதிவு செய்யாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து பூங்கா ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை அறிந்த அமைச்சர் ரஞ்சித் குமார், பூங்காவுக்குள் வந்த அனைவரையும் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வண்டலூர் பூங்காவுக்கு வந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை இலவசமாக பார்வையிடும் வகையில் நுழைவுச் சீட்டுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், உயிரியல் பூங்காவின் இணையதளமான tickets.aazp.in மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இலவச நுழைவுச் சீட்டுகளை பெற்றுள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ள மிகுந்த வரவேற்பின் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளுக்கான அனைத்து நுழைவு சீட்டுகளும் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (on-the-spot) டிக்கெட்டுகள் வழங்கப்படாது.
எதிர்பார்க்கப்படும் அதிகளவிலான பார்வையாளர்களின் வருகையை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி நகர்வதற்கான போதிய இடவசதியை உறுதி செய்யவும், அத்தியாவசிய பார்வையாளர் வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகள் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளின் நலனைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் வசதியான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உயிரியல் பூங்கா அனுபவத்தை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் கனிவான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் பிறந்தநாளையொட்டி வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வரும் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 3 முக்கிய வன உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்களுக்கு கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
வண்டலூர் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பட்டி உயிரியல் பூங்காவில் இரு நாட்கள் இலவசமாக செல்லலாம். இதற்கான முழு கட்டணத்தையும் எங்களது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை செலுத்தும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications