டீசல் போட தவம் இருக்கும் அரசு பஸ்கள்- பயணிகள் தவிப்பு
நெல்லை: அரசு பஸ்களுக்கு தனியார் பங்குகளில் டீசல் நிரப்புவதால் ஏற்படும் காலதாமதத்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு டீசல் விலையை கடந்த ஜனவரி மாதம் உயர்த்தியது. இதில் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பும் தனியார் வாகனங்களுக்கு லிட்டருக்கு ரூ.50 பைசாவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமா கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்து கழகங்கள், ரயில்வே. ராணுவம் ஆகியவற்றுக்கு லிட்டருக்கு சுமார் 12 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசு பஸ்களுக்கு தனியார் பங்குகளில் டீசல் நிரப்ப்படுகிறது.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்ட நெல்லை, நாகர்கோவில் மண்டலங்களிலிருந்து தினமும் 1953 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை தவிர்க்க முதல் கட்டமாக வருவாய் இல்லாத வழித்தட பஸ்களை வெகுவாக குறைக்க போக்குவரத்து கழகம் முடிவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக தனியார் பங்குகளில் அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்பப்படுகிறது. தனியார் பங்குகளில் ஏற்கனவே கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பஸ்களும் அங்கு டீசல் நிரப்ப வரிசையில் காத்திருக்கின்றன.
இதனால் அவசர நிமித்தமாக ரயிலை பிடிக்கவோ, அல்லது வங்கிகள், மருத்துவமனைக்கு அவசரமாக செல்லவோ முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications