உத்தரகாண்ட் மீட்புப்பணி: பறந்து, பறந்து உயிர்களைக் காப்பாற்றிய பெண் விமானிகள்
டெல்லி: இந்திய போர்ப்படையில் பெண் விமானிகள் பயன் படுத்தப்படாத சூழ்நிலையிலும், உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர் பெண் விமானிகள்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய பெண் விமானியான குஷ்பூ குப்தா கூறுகையில், ‘இந்த அனுபவங்கள் உண்மையிலேயே சவாலானவை. மோசமான வானிலையில், தெளிவற்ற சூழ்நிலையில் 11,500 அடி உயரத்தில் பறப்பது என்பது சுலபமல்ல. ஆயினும், பயணத்தின் பாதுகாப்பை முதன்மையாகக் கொள்ளுவதை நாங்கள் எங்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

இவர் இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குஷ்பூ குப்தா இதுவரை தனது சீட்டா ஹெலிகாப்டரில் 55க்கும் மேற்பட்ட பயணங்களைச் செய்துள்ளார்.
மற்றொரு பெண் விமானியான தன்யா ஸ்ரீனிவாஸ், விமான லெப்டினண்டாகப் பணி புரிந்து வருகிறார்.இவருக்கு விமானப் போர்வீரராக இரண்டரை வருட அனுபவம் உள்ளது. மீட்புப் பணி சவால் குறித்து தான்யா கூறுகையில், 'பாலைவனங்கள், மலைகள், சமவெளிகள் போன்ற எத்தனையோ இடங்களில் பறந்திருந்த போதிலும் இந்த மாதிரியான சூழ்நிலையில் பணி புரிவதென்பது சவாலான அனுபவமாகும்' என்கிறார்.
மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மன வருத்தம் உண்டானபோதிலும், இவர்களுக்கு அச்சம் ஏதும் உண்டாகவில்லையாம். இவர்கள் இருவரது கணவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆபரேஷன் ரகத் என்ற பிரிவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ஓட்டும் எந்த நவீன வசதிகளும் சீட்டா, சேட்டக் வகை ஹெலிகாப்டர்கள் 1970-களில் உருவாக்கப்பட்டவை.
சமீபத்தில் அண்டை நாடான பாகிஸ்தானில் போர்ப்படையில் பெண் விமானி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்களது திறமையை இந்திய விமானிகள் நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications