உத்தரகாண்ட்: உடைந்த கால்களுடன் தவிக்கும் இந்த குழந்தை யாருடையது?
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு தொற்றுநோய் பரவி வருகிறது. கண் முன்னே அடித்துச் செல்லப்படும் சடலங்கள்... அழுகி துர்நாற்றம் வீசம் உடல்கள் என அனைத்தையும் கடந்துதான் ஏராளமானோர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இரண்டு கால்களும் முறிந்த நிலையில், 3 வயது குழந்தை ஒன்று மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹிமாலய சுனாமியில் சிக்கி தனது பெற்றோரை விட்டு பிரிந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் தற்போது முறிந்து போயுள்ளது.
தற்போது அந்த குழந்தைக்கு டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலியிலும் வேதனையிலும் தவிக்கும் அந்த குழந்தையின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் நிலை
உத்தரகண்ட் மாநிலத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்ட வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை ராணுவத்தினரும், விமானப்படை வீரர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டு வருகின்றனர்.
மனிதாபிமான உதவி
உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து தவிக்கும் பெண்களையும், குழந்தைகளையும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் பாதுகாப்பான முறையில் கவனித்து வருகின்றனர். முகாம்களில் உணவும், மருந்தும் அளித்தும் பாதுகாக்கின்றனர்.
நோய் தொற்று அபாயம்
கடந்த 11 நாட்களுக்கும் மேலாக வெள்ளநீர் ஓடிக்கொண்டிருப்பதால் ஆற்றில் சடலங்கள் மிதந்து செல்கின்றன. ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதும் நோய் தொற்றினை உருவாக்கியுள்ளது. எனவே மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளையும், சுகாதாரமான உணவுகளையும் முகாம்களில் அளித்து வருகின்றனர்.
கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு
1.5 லட்சம் மக்கள் வரை இப்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள். இதில் கர்ப்பிணிகளும், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவி செய்யவேண்டியது அவசியம் என்று தொண்டு நிறுவன இயக்குநர் லதா செலேப் தெரிவித்தார்.
மிதக்கும் சடலங்கள்
பெருவெள்ளத்தில் கால்நடைகளும், மனிதர்களும், துண்டிக்கப்பட்ட உடல்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. அவற்றை இப்போது மீட்க முடியாது உயிரோடு மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுகளையும், பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளிக்கவேண்டியது அவசியம் என்கிறார் லதா.
மழையிலும் நிவாரணப்பணி
மழையும், நிலச்சரிவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பணியை நிறுத்தாமல் ராணுவத்தினர், மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுவருகின்றனர். புதிதாய் குழந்தை பெற்றவர்களின் நிலைதான் கொஞ்சம் கவலையளிக்கிறது. பிறந்த சிசுவிற்கும், தாய்க்கும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
நெருக்கடி நிலைமை
உறவினர்களை விட்டு பிரிந்தவர்கள், பெற்றோரை விட்டு பிரிந்த குழந்தைகள், கணவனை விட்டுப் பிரிந்த மனைவி, பிள்ளைகளை இழந்த முதியவர்கள் என அனைவரின் முகத்திலும் ஒருவித சோகம் அப்பியுள்ளது. இதைக் காணும் எங்களுக்கும் ஒருவித நெருக்கடியான நிலைதான் ஏற்பட்டுள்ளதாக லதா கூறினார்.
நிச்சயம் சவால்தான்
கண் முன்னால் இறந்த உறவினர்களை நினைத்து அழும் மனிதர்களை காண்பது கொடுமைதான். மிகப்பெரிய துயரச் சம்பவம் இது. கிட்டத்தட்ட 11 நாட்களாக மக்கள் தவித்து வருகின்றனர். குறைவான உணவுதான் வழங்கமுடிகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சரியான உணவு கிடைக்காத காரணத்தால் சோர்வாகத்தான் உள்ளனர்.
தொற்றுநோய் ஆபத்து
பெரும்பாலோனோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தப்பி பசியில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் இருக்க நோயினால் இறக்கும் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கால்கள் முறிந்த குழந்தை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இரண்டு கால்களும் முறிந்த நிலையில், 3 வயது குழந்தை ஒன்று மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள குழந்தை மிகச் சிறிய குழந்தை என்பதால், அக்குழந்தையினால் எவ்வித தகவலையும் தெரிவிக்க முடியவில்லை. அந்தக்குழந்தையின் பெற்றோர் யார்? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
உத்தரகாண்ட் எப்போது மீளும்?
பனி படந்த மலைச்சிகரங்கள்... புனித தலங்கள் என சுற்றுலா பயணிகளை கவரும் சிறப்பம்சங்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு உண்டு. இமாலய சுனாமியில் அனைத்தும் சின்னாபின்னமாகியுள்ளது. அவற்றை புனரமைத்து மீட்கவேண்டும். அப்போதுதான் மீண்டும் சுற்றுலா இந்த மாநிலத்தில் தழைத்தோங்கும். இதுபோன்ற பேரிடர் மீண்டும் நிகழாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது.