உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மதுரை பைலட் பிரவீனின் கடைசி வார்த்தைகள்..
மதுரை: உத்தரகண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மதுரை விமானி பிரவீனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது தாயார் மஞ்சுளா தெரிவித்தார்.
மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-மஞ்சுளா தம்பதியின் ஒரே மகன் பிரவீன்(27). அவர் 2007ம் ஆண்டில் மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் படிப்பில் பட்டம் பெற்றார். இந்திய விமானப் படையில் சேர விரும்பிய அவர் 2008ம் ஆண்டில் ஹைதராபாத்தில் விமானி பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்த பிறகு அவர் 2009ம் ஆண்டில் பெங்களூரில் விமானப் படை விமானியாக பணியாற்றினார். அங்கிருந்து கொல்கத்தா அருகே உள்ள பரக்பூரில் இருக்கும் விமானப் படை பிரிவில் சேர்ந்தார். இந்நிலையில் தான் உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணிக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
மீட்பு பணியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிரவீன் உள்பட 20 பேர் பலியாகினர்.

கதறி அழுத தாய்
மகன் பிரவீன் விபத்தில் பலியான தகவல் கிடைத்தவுடன் மஞ்சுளா கதறி அழுதார். அவருக்கு நண்பர்களும், உறவினர்களும் ஆறுதல் கூறினர்.

கடைசி வார்த்தைகள்
செவ்வாய்க்கிழமை காலையில் பிரவீன் தனது தாய்க்கு போன் செய்து மீட்பு பணி முடிந்து வந்ததும் மறுபடியும் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அன்றே அவர் இறந்துவிட்டார்.

பெண் பார்த்தோமே
பிரவீனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதற்குள் இப்படி ஆகிவட்டதே என்றும் கூறி மஞ்சுளா அழுதார்.












Click it and Unblock the Notifications