ராஜ்யசபா தேர்தல்: ஜெயிலில் இருக்கும் காடுவெட்டி குருவுக்கு அனுப்பிய தபால் ஓட்டு திரும்ப வந்தது…
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் சிறையில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கலாம் என்பதால் புழலில் அடைக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ குருவுக்கு தபால் ஓட்டுப் போட வாக்குச் சீட்டு அனுப்பிவைக்கப்பட்டது. பாமகவினரின் புறக்கணிப்பு முடிவினால் பதிவு செய்யப்படாத வாக்குச் சீட்டு திரும்ப பெறப்பட்டது.
தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றது. பாமக எம்.எல்.ஏவினர் ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. எனினும் சென்னை புழல் சிறையில் உள்ள பாமக எம்.எல்.ஏ குருவிற்கு தபால் ஓட்டுப் போட வாக்குச் சீட்டு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் புறக்கணிப்பு முடிவில் இருந்த குரு ஓட்டுப்போடவில்லை. இதன்பின்னர் வாக்குச் சீட்டு பதிவு செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டது. மொத்தம் 231 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களித்தனர்.
ராமதாஸ், ஜி.கே.மணி, குருவுக்கு வருவாய்த்துறை நோட்டீஸ்:
இந் நிலையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக ராமதாஸ், ஜி.கே.மணி, காடுவெட்டி குருவுக்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில் ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு சென்றோருக்கும் மற்றொரு பிரிவினருக்கிடையே, மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதன் மீதான, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைக் கண்டித்து வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், மூன்று பேர் இறந்தனர்
இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செய்யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தின் படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க., வினரிடமிருந்து பெறும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது.வன்முறையால் வடமாவட்டங்களில் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்து, வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்புப் பணி நடந்தது. போக்குவரத்து துறை, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறைகள் மட்டுமின்றி, தனியாரிடமிருந்தும், 150க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.இவற்றை கணக்கிடும்போது, 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.
இத்தொகையை, பா.ம.க., வினரிடமே வசூலிக்கும் அதிரடியில் அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி செயலாளர் அன்புமணி, கட்சி தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோருக்கு, வருவாய்த்துறை ஆணையர் அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
ஜூலை, 1ம் தேதி முதல், வருவாய்த்துறை ஆணையர் அலுவலகத்தில், விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணை முடிய, ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும், கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications