ஒகேனக்கல் அருவிகளில் பெருவெள்ளம்... 2வது நாளாக குளிக்க தடை!
ஒகேனக்கல்: காவிரியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்வதாலும், கபிணி அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் பெரும் வேகத்தோடு தண்ணீர் விழுகிறது. அருவிப் பகுதிக்குள் நுழையும் படிக்கட்டுகள் வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.
இன்று வார விடுமுறை என்பதால் பயணிகள் குவிந்துள்ளனர். ஆனாலும் வெள்ளம் குறையாததால் 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பரிசல் போக்குவரத்திற்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications