மழை வருகிறது, மக்களை வெளியேற்றுங்கள்: முன்கூட்டியே எச்சரித்த உத்தரகாண்ட் வானிலை மையம்
டேராடூன்: கனமழை பெய்யப் போவதாகவும், அதன் மூலம் வெள்ளம் உண்டாகலாம். எனவே உடனடியாக மக்களை வெளியேற்றுங்கள் என முன்கூட்டியே எச்சரித்ததாக உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு உண்டானது. வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள். மீட்புப் பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை.
இந்தப் பேரழிவினால், மக்களுக்கு இயற்கை மீது கோபம் உண்டானதைப் போல, உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம் மீதும் கோபம் உண்டானது. வானிலைமையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தால், முடிந்தவரை இந்த அழிவைக் குறைத்திருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம், ‘மழை பெய்வதற்கு முன்பே கனமழை பெய்யும் என்றும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கபட்டது' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ‘ ஜூன் 14ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தோம். மேலும், 15ம் தேதி கனமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். மலை பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பவும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மழையினால் ஷார் தாம் யாத்திரையை நான்கு நாட்கள் தடை செய்யவும் கூறினோம்' எனக் கூறியுள்ளார் அம்மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆனந்த் குமார் ஷர்மா.












Click it and Unblock the Notifications