அதெல்லாம் அந்தோனிதான் முடிவெடுப்பார்.. வாஸ்னிக் கருத்து

முகுல் வாஸ்னிக் நேற்று சென்னை வந்திருந்தார். இதனால் சத்தியமூர்த்தி பவன் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அத்தனை கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்தனர். வாஸ்னிக்கை சிறப்பாக வரவேற்றனர்.
பின்னர் பூட்டிய அறைக்குள் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் வாஸ்னிக்.
பின்னர் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வாஸ்னிக். அப்போது வாஸ்னிக் கூறுகையில், தற்போதைய சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரையும் விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன்.
ஒன்றிய, நகர அளவிலும் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளேன். அதன் பின் தமிழக அரசியல் சூழலுக்கேற்ப செயல்திட்டம் ஒன்று வகுக்க உள்ளோம். அந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் உறுதுணையாக இருக்கும்.
ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் முடிவை, எல்லாத் தலைவர்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்பட்டது.
தேமுதிகவை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என்பது அர்த்தமற்ற பேச்சாகும். உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றை திமுகவை ஆதரிக்கும் என்று கூறியதன் காரணமாகத்தான் ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியை ஆதரித்தோம் என்று கூறுவதெல்லாம் பொய்யானவை.
காங்கிரஸ் என்பது அரசியல் இயக்கமாகும். அது வியாபாரம் எதுவும் செய்யவில்லை. மக்களவைத் தேர்தலில் 3-வது அணி நிச்சயம் அமையாது
தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும் அந்தக் குழுவுக்குத் தெரிவிப்போம் என்றார் வாஸ்னிக்.












Click it and Unblock the Notifications