அஸ்ஸாம்: ஆட்டோ டிரைவர்களால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் பலி: ரூ.10க்காக தாக்குதல்?
திபு: அஸ்ஸாமில் ஆட்டோ கட்டணம் குறித்து ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து தாக்கியதில் 16 வயது சிறுவன் ஒருவர் பலியானார்.
அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபுவைச் சேர்ந்தவர் ஹாரன் சாய்கியா. வழக்கறிஞர். அவரது மகன் ஜான்கர் சாய்கியா(16). அவர்கள் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி ஆட்டோவில் சென்றுள்ளனர். கட்டணம் தொடர்பாக அவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த இடத்தில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து ஹாரனையும் அவரது மகனையும் அடித்து நொறுக்கினர். மேலும் இதை தடுக்க வந்த போலீசார் சிலரையும் தாக்கினர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அப்பாவும், மகனும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குவாஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு ஜான்கர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து திபு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடமையை செய்யத் தவறியதற்காக ஒரு துணை எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.10க்காக வாக்குவாதம் நடந்தது தாக்குதலில் முடிந்தது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications