பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியவர் நிரபராதியா?: சுப்ரீம் கோர்ட்டு குட்டு
டெல்லி: திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றியவர் நிரபராதியாக முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். கடந்த 2003-ம் ஆண்டு இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் ரீதியாக பலமுறை உறவு வைத்துக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கார்த்திக்கின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவருக்கு எதிராக தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஷ் சிங் கேஹர் அடங்கிய பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என்று விடுவிக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். கார்த்திக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications