லஷ்கர் இ தொய்பாவைக் காக்க முயல்கிறதா சிபிஐ?... பாஜக கேள்வி
டெல்லி: இஷ்ரத் ஜஹான் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பை குறைத்து காட்ட முயல்கிறதா சிபிஐ என்ற கேள்வி எழுவதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
சிபிஐ குற்றப்பத்திரிக்கை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவிக்கையில், லஷ்கர் இ தொய்பாவின் பங்கு குறித்து சிபிஐ பேசவே இல்லை. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்திய பாதுகாப்பு எந்த அளவுக்கு கேலிக்குரியதாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
சம்பவத்தின் பின்னணி, அதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து சிபிஐ மெளனம் சாதித்துள்ளது வியப்பளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது. இஷ்ரத் உள்ளிட்டோர் யார் என்பதைக் கூட சிபிஐயால் கூற முடியவில்லை. இஷ்ரத்துடன் வந்தவர்கள் யார் என்பதையும் சிபிஐயால் கூற முடியவில்லை.
இவர்கள் தீவிரவாத தொடர்பு உடையவர்கள். தீவிரவாதிகளுடன் 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை சாட்டிலைட் போன் மூலம் பேசியுள்ளனர்.
சிபிஐயின் அறிக்கையில் மத்திய அரசின் தலையீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு விளையாடக் கூடாது, அரசியல் செய்யக் கூடாது என்றார் அவர்.