அரசு வீடுகளில் டேரா போடும் முன்னாள்கள் மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
டெல்லி: பதவி காலம் முடிந்த அமைச்சர், எம்.பி.க்கள், நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், 1 மாதத்துக்குள் அரசாங்க வீடுகளை காலி செய்ய வேண்டும், காலி செய்யாதவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் அரசாங்கம் சார்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் தங்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும், ஓய்வு பெற்ற பின்னரும், அந்த வீடுகளை காலி செய்யாமல் குடி இருப்பதாகவும், அவர்களை அந்த வீடுகளை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
அமைச்சர்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், அதிகாரிகள் அவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும், ஓய்வு பெற்ற பின்னரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வீடுகளை காலி செய்யாமல் குடி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும், 1 மாத காலத்துக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய வேண்டும். தேவைப்பட்டால், அவர்களுக்கு சிறப்பு சலுகையாக, விசேஷ சூழ்நிலையைக் கருதி, மேலும் 1 மாதம் அவகாசம் அளிக்கலாம்.அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்யச் சொல்லி, அவர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக, 3 மாத கால நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும்.
எம்.பி.களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்ய சபாநாயகர், ராஜ்யசபா தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், அவர்களை காலி செய்ய வைப்பதற்கு நியாயமான, பொருத்தமான, ஆட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தவர்களுக்கு அந்த வீடுகளை ஒதுக்குவதற்கு இடையூறாக அவர்களது ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது.
காலி செய்யாதவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்












Click it and Unblock the Notifications