நெல்லை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 4 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட நான்குபேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
தென்காசி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த திருமலைக்குமார் மகன் விக்னேஷ்குமார் 26. எலக்ட்ரீஷியன், செங்கோட்டை மேக்கரை, அடவிநயினார் அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். குளித்துவிட்டு அணையின் மறுகால் பாயும் அபாயகரமான தளத்தில் நடந்தனர். அப்போது கால் தவறி விழுந்த விக்னேஷ்குமார் 122 அடி தண்ணீர் உள்ள அணைக்குள் விழுந்தார். நீண்டநேரமாகியும் அவரது உடலை காணவில்லை. தீயணைப்பு படையினர் 2வது நாளாக தேடிவருகின்றனர்.
திருக்குறுங்குடி, மாவடியை சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் இம்மானுவேல் 23. பிற்பகல், மலையடிப்புதூரில் உள்ள தாமரைகுளத்தில் நண்பர்களோடு குளிக்க சென்றார். நீரில் ஆழமான பகுதியில் சிக்கி பலியானார். வள்ளியூர் தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்.
வீரவநல்லூரை அடுத்துள்ள நயினார்காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி ராமலட்சுமி. இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிற்பகலில், முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டிற்கு கிளம்பினார். மூன்று வயது மகள் வெண்ணிலா, இரண்டு மாத குழந்தை சுகிர்தா ஆகியோரை தூக்கிக்கொண்டு, தாமிரபரணி ஆற்றை கடந்துள்ளார். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அதிகமாக செல்லும் ஆற்று நீரில் சிக்கி இரு குழந்தைகளையும் தவறவிட்டார். வெண்ணிலாவை மீட்டார். இரண்டு மாத குழந்தை சுகிர்தா பலியானது. பின்னர் உடல் மீட்கப்பட்டது. வீரவநல்லூர் போலீசார் விசாரித்தனர்.
செங்கோட்டை வடகரையை சேர்ந்தவர் செண்பகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இறந்துபோனார். அவரை இழந்து அவரது மனைவி மாரியம்மாள், இரண்டு குழந்தைகள் தவித்து வந்தனர். கணவருக்கு திதி கொடுப்பதற்காக குற்றாலம் சென்ற மாரியம்மாள், வரும் வழியில் விஸ்வநாதபுரம் ரயில்வேகேட் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications