மோடியை முன்னிறுத்துவதால் நாட்டுக்குப் பேரழிவுதான்: புத்ததேவ் பட்டாச்சார்யா சாடல்!
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்துவதால் நாட்டுக்குப் பேரழிவுதான் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா சாடியுள்ளார்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய புத்ததேவ், நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டு வருகிறது பாஜக. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. ஒரு காங்கிரஸ் கட்சி போதாதென்று இப்போது நரேந்திர மோடியும் தேசிய அரசியலுக்கு வருகிறாராம். நிச்சயம் நாட்டுக்கு பேரழிவு ஏற்படப் போவது தவிர்க்க முடியாதது.
மேற்கு வங்க மாநிலம் ஜோதிபாசுவின் காலத்தில் மதச்சார்பின்மையின் அடையாளமாக இருந்தது. ஆனால் இப்போது இங்கே திரிணாமுல் காங்கிரஸுடன் கை கோர்க்க போகிறது பாஜக. பாஜகவுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜோதிபாசுவின் ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு ஊடகவியலாளரும் சிறைக்குப் போனது இல்லை.. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ ஊடகங்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார் என்றார்.