இளவரசன் பிரேதப் பரிசோதனை வீடியோ.. நீதிபதிகள் ஆய்வு
சென்னை: இளவரசன் பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் டாக்டர்கள் குழுவும் உடன் இருந்தது.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் இளவரசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது. அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் கூறிய டாக்டர்களை வைத்து பிரேதப் பரிசோதனையை நடத்தவில்லை. எனவே உடலை வாங்க முடியாது என்று இளவரசன் தரப்பு மறுத்து விட்டது. இதனால் உடல் தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உடலை பதப்படுத்தி பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், ரமேஷ் என்பவரும் மறு பிரேதப் பரிசோதனை கோரி மனு செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத் வாதிடுகையில், பிரேத பரிசோதனை, காலை, 7:00 மணிக்கு துவங்கியது. பின், வழக்கறிஞர் கேட்டுக் கொண்ட பின், 8:15 மணிக்கு, நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் காலை 10:30 மணிக்கு, இந்தப் பிரச்னை குறித்து கோர்ட்டில் விசாரணை நடந்தது.
கோர்ட் உத்தரவுக்கு காத்திருக்காமல், பிரேத பரிசோதனையை முடித்து விட்டனர். எங்கள் தரப்பில், டாக்டர் ஒருவர் இருந்திருந்தால், குறைகளை சுட்டிக் காட்டியிருப்பார். எனவே, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். மரணத்தில், எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றார்.
அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதிடுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையை பாருங்கள். அரசு டாக்டரின் அறிக்கையில், உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், காலை, 8:15 மணிக்கு, பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டு, பின், 10:30 க்கு மேல், துவங்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுக்காக, காத்திருந்திருக்கலாம் என்றனர்.
அதற்கு சண்முகவேலாயுதம், டாக்டரிடம், வழக்கறிஞர் பேசியதாக கூறப்படுகிறது. அரசு டாக்டர்கள், அவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றார். இதையடுத்து நீதிபதிகள் ஒரு உத்தரவைப் பிறப்பித்தனர்.
அதன்படி, இளவரசனின் பிரேத பரிசோதனையின் போது, எடுக்கப்பட்ட வீடியோவை, காலை, 10:30 மணிக்கு, பார்க்க, ஏற்பாடு செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் தேக்கால், சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையின், தடய அறிவியல் துறை தலைவர், புதுச்சேரி ஜிப்மரைச் சேர்ந்த, தடய அறிவியல் நிபுணர், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களில் ஒருவர், எங்களுடன் இருக்க வேண்டும்.
தடய அறிவியல் நிபுணரை அனுப்புமாறு ஜிப்மர் இயக்குனரிடம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் தெரிவிக்க வேண்டும். அதேபோல் அரசு குற்றவியல் வழக்கறிஞரும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு தெரிவிக்க வேண்டும். டாக்டர்கள் காலை 10:30 மணிக்கு கோர்ட்டில் இருக்க வேண்டும்.
மனுதாரரின் வழக்கறிஞர், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும். வீடியோ பதிவை பார்க்க பதிவுத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இளவரனின் உடலை மறுஉத்தரவு வரும் வரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று நீதிபதிகள் வீடியோவைப் பார்த்து ஆய்வு செய்தனர். அவர்களுடன் அரசுத் தரப்பு, மனுதாரர்கள் தரப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் டாக்டர்களும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications