பெண் தொடர்பு.. கண்டித்த மனைவியை கொன்று விபத்து என்று டிராமா போட்ட கணவர் கைது
தூத்துக்குடி: பல பெண்களுடன் தான் வைத்திருந்த தொடர்பைக் கண்டித்த மனைவியை குத்திக் கொன்று விட்டு விபத்து என்று நாடகமாடிய கணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் 35 வயதான சுதாகர். இவருக்கும், சாமியார்த்தோப்பைச் சேர்ந்த சூரியா என்பவருக்கும் கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. புது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த சுதாகர் நேற்று ஆம்னி வேனில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலுக்குச் சென்றார்.
இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது மனைவியுடன் மோதல் ஏற்பட்டுள்ளது சுதாகருக்கு. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைக் குறிப்பிட்டு சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுதாகர், கத்தியை எடுத்துக் குத்தி விட்டார். அதில் சூர்யா படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதைப் பார்த்துப் பயந்து போன சுதாகர், காரை சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து போல செட்டப் செய்து விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரை பிடித்து விசாரித்தபோது உண்மையைக் கக்கி விட்டார்.
சுதாகரைக் கைது செய்து தற்போது போலீஸார் விசாரணையைத் தொடர்கின்றனர்.