மேட்டூர் அணையில் நீர்மட்டம் 59 அடியானது…. விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கபினி,ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கபினி அணையின் நீர் வரத்து 36ஆயிரம் கன அடியாக இருந்தாலும், அதிலிருந்து 40ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அங்குள்ள ஹேமாவதி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7ஆயிரத்து 440 கன அடியாக உள்ளது. தற்போதைய கொள்ளளவு 2ஆயிரத்து 900 அடியாக உள்ளது. ஹரங்கி அணைக்கு வினாடிக்கு 8ஆயிரத்து 992 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த அணையின் கொள்ளளவு 2ஆயிரத்து 856 அடியை எட்டியுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 28ஆயிரத்து 759 கன அடியாக உள்ளது. அணை 107 புள்ளி 48 அடி கொள்ளவை எட்டியுள்ளதால், வினாடிக்கு ஆயிரத்து 794 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
59 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டடி உயர்ந்து 59 அடியாக உள்ளது. தற்போது 23.85 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 24ஆயிரத்து 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர் மட்டம் உயரும்
கர்நாடகாவிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், மேலும் அணையில் நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றும் கூறியுள்ளனர்.
மீன்வளர்ப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மீன் உற்பத்தியை பெருக்க மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீன் வளத்துறை மையத்தின் மீன் விதைப்பண்ணையின் மூலம், உருவாக்கப்பட்ட மீன்கள் மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் விடப்பட்டு வருகின்றன.
500 டன் மீன்கள்
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையிலிருந்து 500டன் மீன் உற்பத்தி செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2வாரத்தில் மட்டும் 8 லட்சம் மீன்கள் மேட்டூர் அணையில் விடப்பட்டுள்ளன.
சாகுபடிக்கு தண்ணீர்
நீர் வரத்து அதிகமாகவும், தேவையான நீர் இருப்பும் இருப்பதால், சாகுபடிக்காக மேட்டூர் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications