பார்களில் மது பரிமாறும் பணியில் பெண்கள்: கர்நாடக நீதிமன்றம் அனுமதி
பெங்களூர்: அனுமதி பெற்ற பார்களில், மது பரிமாறும் பணிகளில் பெண்களை அமர்த்தலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்களை மது பரிமாரும் பார்களில் பணிக்கு அமர்த்துவது குறித்து உணவக உரிமையாளர்கள் சார்பில் தொடங்கப் பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்.
அதில், மது பரிமாறும் இடங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தப்பில்லை என கூறியுள்ளது. மேலும், இது குறித்து அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவக உரிமையாளர்கள் பின்பற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அரசும், உணவக உரிமையாளர்களும் அமர்ந்து பேசி, இதில் உள்ள நிறை குறைகளை அலசி ஆராயவும் அது அறிவுரை கூறியுள்ளது.
மது பரிமாறும் இடங்களில் பணி புரியும் பெண்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், பணி புரியும் இடத்தில் முழு நீளக் கை வைத்த சட்டையும், கால்சட்டையும் அணிந்து தான் பெண்கள் வர வேண்டும் எனக் கூறியுள்ளது.
தற்போது சால்வை அணிந்து சுடிதார் அல்லது கோர்ட் அணிந்து மேற்கூறிய உடையும் அணிந்து வரலாம் என விதியைச் சற்று தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரில் பணி புரிபவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ கூட இருக்கலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.