போபர்ஸ் ஊழல் 'நாயகன்' குவாத்ரோச்சி மாரடைப்பால் மரணம்
டெல்லி: இந்தியாவைக் கலக்கிய மாபெரும் ஊழலான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கிய காரணகர்த்தாவான இத்தாலி நாட்டு புரோக்கர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி மாரடைப்பால் மரணமடைந்தார்.
இத்தாலியின் மிலன் நகரில் வெள்ளிக்கிழமை இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாத்ரோச்சியின் மரணச் செய்தியை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய போபர்ஸ்
இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். ராஜீவ் காந்தியை நிலைகுலையச் செய்த ஊழலும் கூட.

குவாத்ரோச்சிதான் புரோக்கர்
1986ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1500 கோடிக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பெருமளவில் லஞ்சம், ராஜீவ் குடும்பத்துக்குக் கை மாறியதாக சர்ச்சை எழுந்தது. இந்த பேரத்திற்கு முக்கியத் தரகாக இருந்து செயல்பட்டவர் குவாத்ரோச்சி.

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்
குவாத்ரோச்சி, ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால் ராஜீவ் காந்திக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. ராஜீவ் காந்திக்கும் பெரும் சரிவு ஏற்பட்டது.

2 முறை நாடு கடத்த முயற்சி
குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர 2002ம் ஆண்டு ஒருமுறையும், 2007 ஒருமுறையும் சிபிஐ முயற்சித்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இன்னொரு புள்ளி 2001ல் மரணம்
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த இன்னொரு முக்கியப் புள்ளியான வின் சத்தா 2001ம் ஆண்டிலேயே இறந்து விட்டார்.

1993ல் தப்பினார்
இந்தியாவில் தங்கியிருந்த குவாத்ரோச்சி 1993ம் ஆண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

2011ல் கேஸ் குளோஸ்
இந்த வழக்கில் குவாத்ரோச்சியைக் கொண்டு வர முடியாமல் திணறிய சிபிஐ 2011ம் ஆண்டு அவருக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக டெல்லி கோர்ட்டில் தெரிவித்தது. அதை கோர்ட்டும் ஏற்றது.
இப்போது குவாத்ரோச்சியின் கதை இயற்கையாகவே முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications