சென்னை கன்னியாஸ்திரி ஒடிசாவில் பலாத்காரம்: 2 பேர் கைது
காந்தமால்: கன்னியாஸ்திரியாக பயிற்சி பெறும் பெண்ணை ஒடிசாவில் ஒருவாரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் அந்தப் பெண்ணின் உறவினர், மற்றொருவர் அந்தப் பெண்ணின் நண்பராவர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒடிசா காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 28 வயதாகும் அந்தப் பெண் சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த ஜூலை 4ம் தேதி இவரை தொலைபேசியில் அழைத்த மர்ம பெண் ஒருவர், கன்னியாஸ்திரியின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன அவர், தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி, ரயிலில் சென்றார்.
தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார் கன்னியாஸ்திரி. அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர் ஜோதிந்திரா சுபாசுந்தர் என்பவனும், அவளது நண்பர்கள் இருவரும், அந்தப் பெண்ணை கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, ஒருவாரமாக தான் சீரழிக்கப்பட்டது குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர். போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜோதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர்.
கன்னியாஸ் திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, கடத்தல், நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறினார். அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.