காவிரி: மேலும் 10 டிஎம்சி நீர் தர கர்நாடகம் ஒப்புதல்

"34 டிஎம்சி நீரில் 24 டிஎம்சி நீர் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 10 டிஎம்சி நீர் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். பருவ மழையின் தன்மையைப் பொருத்தே ஆகஸ்ட் மாதத்துக்கான 50 டிஎம்சி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்று காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் கூறினார்.
எனினும், கூட்ட முடிவில் தனது உத்தரவை மேற்பார்வைக் குழுவின் தலைவர் அலோக் ராவத் வெளியிடவில்லை. அந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேற்பார்வைக் குழுவின் மூன்றாவது கூட்டம் மத்திய நீர் வளத் துறைச் செயலர் அலோக் ராவத் தலைமையில் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள அரசு சார்பில் அந்த மாநில நீர் வளத் துறை தலைமைப் பொறியாளர் லத்திகா, புதுச்சேரி அரசு சார்பில் ஓர் அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் பேசுகையில், "கர்நாடகத்தின் நான்கு அணைகளில் 82.350 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேலும், கர்நாடக அணைகளில் அதிக நீர்வரத்து உள்ளது.
ஆனால், அதிக மழை காரணமாக கபினி அணையில் இருந்து வெளியாகும் வெள்ள நீர் மட்டும் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, ஜூலை மாதத்தில் 34 டிஎம்சி நீரும், ஆகஸ்ட் மாதத்துக்கு 50 டிஎம்சி நீரும் கர்நாடகம் வழங்க வேண்டும்.
கர்நாடக அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள 82.350 டிஎம்சி நீரை தற்போது அந்த மாநில அரசு பாசனத்துக்காக பயன்படுத்தி வருகிறது.
கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும் என்று எங்கள் மாநில விவசாயிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
ஜூலை மாதத்துக்கான 34 டிஎம்சி நீரையும், ஆகஸ்ட் மாதத்துக்கான 50 டிஎம்சி நீரையும் கர்நாடகம் வழங்காவிட்டால், தமிழகத்தின் சம்பா சாகுபடி பாதிக்கும்.
கேரளத்தின் பங்கையும் வழங்க வேண்டும்:
கேரளத்துக்கு வழங்கப்படும் 30 டிஎம்சி நீரில் 9 டிஎம்சி நீரை மட்டுமே அந்த மாநிலம் பயன்படுத்துகிறது.
கேரளம் பயன்படுத்தாத 21 டிஎம்சி நீரை கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக திறந்துவிட வேண்டும்.
2012-13 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 53.18 டிஎம்சி நீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
கடந்த இரண்டு கூட்டங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட குழுவின் தலைவர் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காதது வருத்தம் அளிக்கிறது," என்றார்.












Click it and Unblock the Notifications