ஒடிஷாவுக்கும் குஜராத்தும் ஒற்றுமைகள் உண்டு: நரேந்திர மோடி

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா பிரசாரக் குழு தலைவருமான நரேந்திர மோடி இன்று ஒடிஷா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று காலை 9.20 மணிக்கு ஒடிஷா தலைநகர் புவனேஸ்வர் சென்றடைந்த நரேந்திர மோடியை அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சாலை வழியாக அவர் பூரிக்கு காலை 10.50 மணிக்கு சென்றார்.
அங்கு பாலபத்ரா, சுவப்தரா ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது உத்தர்காண்ட் வெள்ளத்தில் இறந்தோரின் ஆத்மா சாந்தியடைய மோடி பிரார்த்தித்தார். பின்னர் கஜபதி மஹாராஜா அரண்மனையில் மன்னர் கஜபதி திக்திவ்யசிங் தேவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து கோபர்தான் மடத்தில் பூரி சங்கராச்சாரியாரிடம் மோடி ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஒரிய மொழியிலேயே பேசிய மோடி, சோம்நாத் மண்ணில் இருந்து பூரி புனித தலத்துக்கு ஜெகநாதரின் ஆசியைப் பெறுவதற்காக வந்துள்ளேன். இந்த இடத்தை நான் போற்றி வணங்குகிறேன். இன்று குஜராத் மாநிலம் வளர்ந்துள்ளது எனில் என்னுடைய ஒடிஷா சகோதரர்களால்தான். அவர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
குஜராத்துக்கும் ஒடிஷாவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. ஒடிஷாவின் கோனார்க்கில் சூரிய கோயில் உள்ளது. கிழக்கில் உதயமாகும் போது முதலில் சூரிய கதிர்கள் அக்கோயிலை தழுவிச் செல்லும். மாலையில் மேற்கில் சூரியன் மறையும் போது குஜராத்தின் மோதெராவில் சூரியக் கதிர்கள் பட்டு மறையும் என்றார்.
மோடி ஒரிய மொழியிலேயே பேசியவுடன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் உட்பட பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications