கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி ‘பெருந்திரள் மரண’ போராட்டம்!
இடிந்தகரை: கூடங்குளத்தில் செயல்படத் தொடங்கியுள்ள அணுமின் நிலையத்தை உடனே மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நேற்று மாலை ‘பெருந்திரள் மரண' போராட்டம் நடத்தப்பட்டது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் 700 நாட்களை எட்டியுள்ளது. ஆனால் கடந்த 13-ந் தேதி முதல் அங்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. இதைக் கண்டித்தும் அணு உலையை மூட வலியுறுத்தியும் நேற்று மாலை பெருந்திரள் மரண போராட்டம் நடத்தப்பட்டது.

அணுஉலை செயல்படத் தொடங்கிவிட்டதால் நாங்கள் செத்து விழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இடிந்தகரை ஊருக்குள் நுழையும் பகுதியிலிருந்து ஊர் எல்லை வரையிலும் பெண்களும் ஆண்களும் திடீர் திடீரென இறந்து விழுந்தது போன்று படுத்திருந்தனர். சுமார் 1 மணி நேரம் இப்படி இறந்தது போல் அனைவரும் படுத்திருந்தனர். இந்த பெருந்திரள் மரண போராட்டத்தில் போராட்டக் குழுவின் தலைவர்களான எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்,
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை, கூடுதாழை, வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications