சென்னையில் இடி மின்னல், பேய்க் காற்றுடன் இரவெல்லாம் மழை!
சென்னை: சென்னையில் நேற்று இரவெல்லாம் இடி மின்னல் பேய்க் காற்றுடன் கனமழை பெய்தது.
குடிநீரை குடம் ரூ 10 என விலை கொடுத்து வாங்கும் அவலத்தில் உள்ள சென்னை மற்றும் புறநகர்வாசிகளுக்கு இது சற்றே ஆறுதலைத் தந்தது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு 9 மணிக்கு பெரும் சூறைக் காற்று புழுதியை வாரி இறைத்தபடி கடந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications