குடிபோதையில் மனைவியின் விரல்களைத் துண்டாக்கிய கணவன் கைது
இம்பால்: குடிபோதையில் மனைவியின் மூன்று விரல்களை வெட்டியெறிந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் உள்ள தவ்பால் மாவட்டத்தில் சாலுக்பாம் கிராமத்தில் வசித்து வருபவர் தோய்தோய் தேவி (43).இவரது கணவர் தோலென்கோமா சிங். இவர் குடிபோதைக்கு அடிமையானவர்.
கடந்த புதனன்று இரவு, உறவினர்களுடன் அமர்ந்து தோய்தோய் தேவி பேசிக் கொண்டிருந்த போது, குடி போதையில் அங்கு வந்துள்ளார் தோலென்கோமா. வங்கி கையிறுப்பு பற்றி பேச ஆரம்பித்த கணவன், மனைவி இடையில் வாக்குவாதம் உண்டாகியுள்ளது.
அப்போது, திடீரென மனைவி மீது பாய்ந்த கணவன், அவரது கையில் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் மனைவியை தாக்க தொடங்கியுள்ளார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு தனது வலது கையை முன்னோக்கி நீட்டியிருக்கிறார் தோய்தோய் தேவி.
இதில், வெட்டுக்கத்தியில் காயம் பட்டு அவரது வலதுகையில் மூன்று விரல்கள் துண்டாயின. உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது துண்டான விரலை மீண்டும் ஒட்ட வைக்க இயலவில்லை.
இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து வியாழனன்று தோலென்கோமா கைது செய்யப்பட்டுள்ளார்.