பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடிதான் பொருத்தமானவர்: ஹேமமாலினி

நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ள காங்கிரஸ், பாரதீய ஜனதா இரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
பா.ஜ.க.வில் பிரசார பொறுப்பை குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடியிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் பிரசாரத்தை புதுமையான முறையில் செயல்படுத்த 12 குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் கூட, மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர்களில் சிலர் வெளிப்படையாக மோடியை வரவேற்று ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். பா.ஜ.க. ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வாரணாசியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த ஹேமமாலினி பேசியதாவது:
‘‘மவுனமாக இருக்கும் தலைவர்கள் நமக்கு தேவை இல்லை. நரேந்திரமோடி போன்ற தலைவர் தான் நமக்கு தேவை. நாட்டின் மேம்பாட்டில் மோடி தெளிவான பார்வையுடன் உள்ளார். அவர் சொன்னதை செய்கிறார். எனவே பிரதமர் பதவிக்கு அவர்தான் மிக, மிக பொருத்தமானவர்'' என்றார்.
சமீபத்தில் நாடெங்கும் எடுத்த கருத்துக்கணிப்பில் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க. பெரிய அளவில் வெற்றியை குவிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் பா.ஜ.க. கூட்டணி கட்சியினரும் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications