ஆடி வெள்ளி… அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சென்னை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்தும், பாலபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தட்சணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தொடங்குகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த மூன்று தினங்களும் புனித தினங்களாக கருதும் பக்தர்கள் அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்தும், பாலபிஷேகம் செய்தும் வழிபடுகின்றனர்.

அம்மன் கோவில்
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன், நாகாத்தம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொங்கல் வழிபாடு
கோலவிழி பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல் நாகாத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தும், எலுமிச்சை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மடப்புரம் காளி கோவில்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, மானாமதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆடி ஞாயிறுக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது சிறப்பம்சமாகும்.












Click it and Unblock the Notifications