பகைவரையும் இகழ்ந்து பேசாதவர் வாலி - கருணாநிதி இரங்கல்
சென்னை: பகைவரையும் இகழ்ந்து பேசாத பண்பாளராக வாலி திகழ்ந்தார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கவிஞர் வாலியின் உடலுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் விடுத்த இரங்கல் அறிக்கை:
திரையுலக வரலாற்றில் வாலி ஒரு அழிக்க முடியாத அத்தியாயம்!
அந்த அத்தியாயம் இன்றைக்கு முடிந்து விட்டது. ஆனால் அவர் தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்த புகழொளி என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியது.

பல்லாண்டுகளாக அவரும் நானும் நண்பர்களாக பழகி இருக்கிறோம். எந்த ஒரு நேரத்திலும் அவர் தன் பகைவர்களை இகழ்ந்து பேசியதில்லை. நண்பர்கள் காட்டிய அன்பை மறக்கும் தன்மையும் அவரிடத்திலே இல்லை.
இதிகாசங்களையும் தமிழ் இலக்கியங்களாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. கவிதைச் சுரங்கமாகவே அவர் வாழ்ந்தார். இன்றைக்கு அவர் மறைந்து விட்ட நிலையிலும், அவர் எழுதிய பாடல்கள் மறையாமல் மக்கள் மனதில் பசுமையாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன.
எனக்கு மிகச் சிறந்த நண்பராக விளங்கிய வாலியை இழந்து விட்டேனா என்ற கேள்வி என் மனதிலே எழுகிறது. வாலியின் புகழ் வாழும். அவருடைய பெயருக்கு என்றைக்கும் ஒரு பெருமை உண்டு.
வாலியை இழந்து நிற்கும் திரையுலகத்திற்கு நான் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய குடும்பத்தாருக்கு நெஞ்சார்ந்த துயரத்தை வெளிப்படுத்தி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியின் குடும்பம் மொத்தமும் கவிஞர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மகன் முக ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் காலையிலேயே அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications