பாஜக, இந்துமுன்னணியினர் தொடர் படுகொலை: தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு
சேலம்: பா.ஜ.க.வினர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து வரும் 22ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மை கொலையாளிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சேலம் மற்றும் திருப்பூரில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் பாஜகவினர் தொடர் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்து இயக்க தலைவர்களும், பா.ஜனதா கட்சியினரும் தொடர்ந்து வெட்டப்பட்டும், கொல்லப்பட்டும் வருகிறார்கள்.
இதை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பயங்கரவாதிகள் தமக்கு அரசு ஆதரவு இருப்பது போன்று நினைக்கிறார்கள்.
கடந்த 1-ந்தேதி வேலூரில் இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் கொல்லப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
பரமக்குடியில் பா.ஜனதா கவுன்சிலர் முருகன், வேலூரில் பா.ஜனதா மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கன்னியாகுமரியில் பா.ஜனதா தலைவர் எம்.ஆர்.காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த், திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெட்டப்பட்டுள்ளார்கள்.
பா.ஜனதா மற்றும் இந்து இயக்க தலைவர்களை குறி வைத்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்வது காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்க செய்துவிடும். ஆயுதம் எடுத்து தாக்குதலில் ஈடுபடும் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களும் ஆயுதம் எடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும்.
இதனைக்கண்டித்து வரும் 22ஆம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் நடத்த உள்ளதாக அவர் கூறினார். இந்த முழு அடைப்புக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பொன் ராதா கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications