வெப்பச் சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்தம்.. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!
சென்னை: வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை மேலும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை கர்நாடகா, கேரளாவில் பெய்து வருகிறது. அது தீவிரமும் அடைந்துள்ளது. இந்த மழை காரணமாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலையிலும் இரவிலும் மழை அடித்துக் கொட்டுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதால் நகரே குளிராகியுள்ளது.

இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்குமாம். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஓரளவு மழை கிடைத்து வந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது வங்க கடலில் ஒடிசாவுக்கும், ஆந்திராவுக்கும் இடையே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை கிடைக்கும்.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications