ஸ்வான் டெலிகாம் என்னுடையதல்ல, யூனிடெக் நிறுவனத்துக்கு வந்தது டாடாவின் பணம்-அனில் அம்பானி

ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற தகுதியற்ற நிறுவனம். ஆனால் முறைகேடு மூலம் அலைக்கற்றை பெற்றது என்பது சிபிஐயின் புகார். இதனால் 3 ரிலையன்ஸ் குழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சாட்சியம் அளித்த அரசியல் தரகர் நீரா ராடியாவும் கூட ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோர் சாட்சியமளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று 2011ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அனில் அம்பானி கொடுத்த வாக்குமூலத்தை சிபிஐ தாக்கல் செய்தது.
அதில், இந்த விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் எனக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. மக்களுக்கு தொலைத் தொடர்பு வசதி அளிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு.
ஒருநாளைக்கு பல ஆயிரம் வரவு செலவுகள் நடைபெறுகின்றன. அனைத்தையும் நினைவில் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் ஒரு துணை நிறுவனம் ஸ்வான் டெலிகாம் என்பதை ஒப்புக் கொள்ளமாட்டேன். அது என்னுடைய நிறுவனம் அல்ல.
மற்றவர்களைப் போலவே ஆ. ராசாவையும் நான் சந்தித்தேன். ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது ஆ.ராசாவை நான் சந்திக்கவில்லை. மேலும் அலைக்கற்றை உரிமம் பெற்ற யுனிடெக் நிறுவனத்துக்கு டாடா நிறுவனம்தான் நிதி உதவி செய்தது என்று கூறியுள்ளார் அனில் அம்பானி.












Click it and Unblock the Notifications