இது தான் ராகுல் காந்தியின் ‘ஜன்னல்’.. Khidkee.com!
டெல்லி: ஒரு பிரச்சனையில் ஒரே கருத்தை இந்தியா முழுவதும் சொல்ல வேண்டும்.. இதுதான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சியின் துணைத் தலைவரான ‘நம்பிக்கை நட்சத்திரம்' ராகுல் காந்தி பிறப்பித்திருக்கும் உத்தரவு.
லோக்சபா தேர்தலில் எப்படியும் திராணியை காண்பித்து தமது ‘தலைமை'த்துவ பண்பை நிரூபித்துவிடுவது என்பது ராகுல் காந்தியின் கனவு. இதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இதன் ஒருபகுதியாக டெல்லியில் இந்தியா முழுவதும் இருந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ‘பயிற்சி' முகாம் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமின் ஒருபகுதியாகத்தான் ஃபேஸ்புக், ஆர்குட் போல கிட்கி என்ற ஒரு சமூக வலைதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. முக்கியமான பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? தொலைக்காட்சி ஊடகங்களில் எப்படியெல்லாம் பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக் கூடாது? என்பது போல ஏராளமான அட்வைஸ்கள் இந்த கிட்கியில் கிடைக்குமாம்..
கிட்கி என்றால் ஜன்னல் என்று பெயர். இந்த ஜன்னலை தமிழக காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆவலுடன் வரவேற்று ஃபேஸ்புக்கில் நேற்று பதிவு போட்டிருக்கிறது. அதில், "மேலும் நமது உறவை பலபடுத்த காங்கிரஸ் நபர்கள் / நண்பர்கள் / அனுதாபிகளுக்கான ஒரு பிரத்யேக #KHIDKEE ( facebook போல உள்ள - ஜன்னல் சமுக வலை ) அதிகாரப்பூர்வமாக நாளை 24/7/2013 தொடங்க இருக்கிறது. khidkee.com" என்று பதிவிடப்பட்டிருக்கிறது.
khidkee.com ஐ இளைஞர் காங்கிரஸ்தான் நடத்துகிறது. ராகுலின் இந்த ஜன்னலில் உடனேயே எட்டிப்பார்த்துவிட முடியாது. உங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் கொடுத்து அதன் பின்பு ஜன்னல் உரிமையாளர்கள் ஒப்புதல் கொடுத்தால்தான் போக முடியும். நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.. எனக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. ஒருவேளை காங்கிரசாருக்கு மட்டும்தான் அனுமதியோ என்னவோ?
இதில் மிகப் பெரிய ஒரு கூத்தும் அரங்கேறி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பலம் கொடுக்கக் கூடிய இந்த ஜன்னல் இணையதளத்தை வடிவமைத்தது ஒரு பாரதிய ஜனதா நபர் போல.. இணையப் பக்கத்தின் இறுதியில் காங்கிரசின் மூவர்ண கொடிக்குப் பதிலாக பாரதிய ஜனதாவின் காவி, பச்சை நிறத்தை போட்டுவிட்டார்! இதுதான் காங்கிரஸ் என்கிறீர்களா?
இது ஒருபுறம் இருக்க.. டெல்லியில் ராகுல் காந்தி அட்வைஸ் செய்த 24 மணி நேரத்துக்குள் அத்வானியின் ரத யாத்திரையால்தான் தீவிரவாதம் வந்தது என்று 'நார்த் இந்தியா நாராயணசாமி' திக்விஜய்சிங் என்று சொல்லப் போய் மீடியாக்களிடம் சிக்கிக் கொண்டார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல். குழப்பத்தில் சிக்கிய அவரோ 'பாஜகதான் தீவிரவாதத்தின் குறியீடு' என்று ஒரே போடு போட்டார்.
ராகுல் காந்தியின் இந்த ஜன்னல் வருகைக்குப் பின் இந்த திக்விஜய்சிங் வகையறாக்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பெரிய ஆவல்...












Click it and Unblock the Notifications