தர்மபுரியில் மீண்டும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - ஒரு குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
தர்மபுரி: தர்மபுரியில் காதல் செய்த ஜோடியின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுதா. இவர் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் அதே போல, வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரேஷ். இவர் இன்னொரு வகுப்பைச் சேர்ந்தவர்.
இருவரும் கடந்த முன்று ஆண்டுகளாக காதலித்தனர். பின்னர் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சுதிப் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது. சுதா தனது கணவர் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
ஆனால், சுதா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வேப்பமரத்தூரைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் சிலர் கூடி விவாதித்து, அவர்களாகவே ஒரு முடிவெடுத்து, சுரேஷ் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்னர். மேலும் ஊரில் அவரது குடும்பத்தினரை இழிவு செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி பொம்மிடி காவல் நிலையத்தில் சுதா புகார் கொடுத்துள்ளர். புகாரப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு மட்டும் செய்தனர். ஆனால், அந்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து, இந்த புகார் குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் சுதா நேரில் புகார் அளித்துள்ளார். அதில், வேப்பமரத்தூரில் உள்ள ஒரு கும்பல் என்னையும், கணவர் சுரேஷ் குடும்பத்தையும் ஊரில் இருக்கக் கூடாது என மிரட்டி வருகின்றனர். எனவே எனது குடும்பத்திற்கும் எனது கணவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
மேலும், அந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஏற்கெனவே காவல் நிலையத்தில் கொடுத்த என்னுடைய புகார் மனு மீது அரூர் டி.எஸ்.பி சம்பத் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்க முயற்சி செய்து வருகின்றார் என்றும் கூறியுள்ளார்.
தர்மபுரியில் மீண்டும் காதல் திருமண மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications