கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தார். முதல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத சூழலில் கூடங்குளத்தில் மின்உற்பத்தியை தொடங்க அனுமதித்தது தவறு என்றும் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். 2வது வழக்கில், உச்சநீதிமன்றம் விதித்த 15 நிபந்தனைகளையும் நிறைவேற்றாத கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மின் உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என்று சுந்தரராஜன் வலியுறுத்தியிருந்தார்.

மற்றொரு வழக்கை வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்திருந்தார். அவர் தமது மனுவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட 152 வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை, மாநில அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோமையாஜி, கூடங்குளத்தில் இயல்பு நிலைமை திரும்பவில்லை. இதனால் வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 3 வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications